Top Ad 728x90

,

அன்றும் இன்றும்

தாய்மை padam

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகையை வரமாய் வேண்டிநின்றனர்
இன்று உன் வருகையை சாபமாய் சாடுகின்றனர்
அன்று உன் வருகை அனைவருக்கும் ஆரவாரம்
இன்று உன் வருகை எங்களுக்கு அவமானம்
அன்று நீ வந்தவுடன் எத்தனை அரவணைப்பு
இன்று நீ வருவதால் எத்தனை அருவெறுப்பு
அன்று நீ வந்தவுடன் இன்புற்றாள் ஈன்றெடுத்தவள்
இன்று நீ வருவதால் துன்புறுகிறான் துணைநிற்பவன்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று உன் வருகைக்கு எத்தனை பிரார்த்தனைகள்
இன்று நீ வராமலிருக்க எத்தனை பரிகாரங்கள்
அன்று உன் வருகையை எதிர்நோக்கி ஏங்கியிருந்தனர்
இன்று நீ வராமலிருக்க குலசாமிக்கு கும்பிட்டுக்கொண்டனர்
அன்று உன் வருகைக்கு அன்னையின்  கைவைத்தியம்
இன்று நீ வராமலிருக்க அத்தையின் கைவைத்தியம்
அன்று தினந்தினம் வருவாயாவென்று பெற்றோருக்கு பேரார்வம்
இன்று மாதாமாதம் வந்துவிட்டாயேவென்று என்னவனுக்கு  ஏமாற்றம்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வராததால் அன்னைக்கு அவமானம்
இன்று உன் வருகையால் அன்பானவனுக்கு அவமானம்
அன்று காலத்தில் வராததால் தாய்க்கு தலைவலி
இன்று காலம்தாழ்ந்தும் வருவதால் தாலிகட்டியவனுக்கு தலைகுனிவு
அன்று  நீ வராததால் கன்னித்தன்மை கிடைக்கப்பெறவில்லை
இன்று உன் வருகையால் தாய்மைத்துவம் தரப்படவில்லை
அன்று நீ வராததால் மங்கையில்லை என்றனர்
இன்று உன் வருகையால் மலடிநான் என்கின்றனர்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ வந்தவுடன் சீரெனக்கு செய்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் சீமந்தம் செய்திருப்பர்
அன்று நீ வந்தபோது வளையல்கள் அணிவித்தனர்
இன்று நீ வராமலிருந்திருந்தால் வளைகாப்பு செய்திருப்பர்
அன்று அமர்ந்துவிட்டேனா என்று அம்மாவிடம் கேட்டனர்
இன்று அப்பாவாகிவிட்டாயா என்று அவரிடம் கேட்கின்றனர்
அன்று காலத்தில் நீ வராததால் கலக்கம்
இன்று கலந்தும் நீ வருகிறாயேவென்று கண்ணீர்

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
அன்று நீ காண்போருக்கெல்லாம் கதாநாயகியாய் காட்சிதந்தாய்
இன்று நீ வீட்டாருக்கு வில்லியாய் வெளிப்படுகிறாய்
பருவத்தில் வராததால் என் பெண்மை பரிகசிக்கப்பட்டது
ஆண்டுகளாகியும் வருவதால் அவர் ஆண்மை அசிங்கப்படுகிறது
அன்று நீ வந்தவுடன் ஊருக்கே விருந்து
இன்று நான் விருந்தாகியும் எனக்கின்று மருந்து
பருவத்தில் நான் பூப்பெய்யாததால் பெற்றோருக்கு பேரவமானம்
மணந்துநாளாகியும் நான் மசக்கையாகாததால் எங்களுக்கு மனவேதனை

அன்று வருடங்கள் கடந்து வந்ததால் வருத்தம்
இன்று திங்கள் தவறாமல் வருவதால் துயரம்
தாய்மையடைய தாமதமாகும் தம்பதிகளுக்கோர் தாழ்மையான வேண்டுகோள்
இனியும் காத்திராமல் இன்றே மருத்துவரிடம் ஆலோசிக்கலாமே
ஆன்டுகளாய் பிரசவிக்காதவர்கள்கூட அறிவியலின் துணையால் ஆனந்தமடைந்துள்ளனர்
மனந்துவண்டவர்கள்கூட மகத்தான மருத்துவத்தால் மாதங்களில் மகப்பேறடைந்துள்ளனர்
மனிதமுயற்சியால் முடியாதவைகள்கூட மருந்துகளால் மாயமாய் அரங்கேறிகொண்டிருக்கிறது
சோதனைக்குழாய் குழந்தை, வாடகைத்தாயென்று சாதனைப்பல சாத்தியமாயுள்ளது
இதுவும் கடந்து போகுமென்று நம்பிக்கையுடன் நடக்கலாமே
மருத்துவத்தால் முடியாவிடில் தத்தெடுப்பதொன்றும் வெகு தொலைவிலில்லையே

- ஜெயச்சந்திரன்

0 Comments:

Post a Comment

Top Ad 728x90